கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல்

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல்
Published on

கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சுங்கச்சாவடிகளில் வாகனங்களில் செல்வோர் கட்டணம் செலுத்த வேண்டாம் என அரசு அறிவித்திருந்தது. இதன் காரணமாக கிருஷ்ணகிரியில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சுங்கச்சாவடி வழியாக தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களில் இருந்து ஓசூர், பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் வந்து செல்கின்றன. அதேபோல வடமாநிலங்கள், கர்நாடகா மற்றும் ஓசூரில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன.

இதனால் இந்த சுங்கச்சாவடி 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். அத்தியாவசிய பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் மற்றும் விவசாய பொருட்களை ஏற்றி சென்ற வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்று வந்தன. இந்த சுங்கச்சாவடியில் ஆண்டுக்கு ஒரு முறை கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

இதனிடையே இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் வாகனங்களுக்கு ஏற்றாற் போல கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முதல் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணி தொடங்கி உள்ளது. தற்போது பஸ்கள், கார்கள் இதர வாகனங்கள் செல்லாததால் சுங்கச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. அதே நேரத்தில் இந்த சுங்கச்சாவடி வழியாக செல்லும் சில கனரக வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விவசாய விளை பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com