சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.22½ லட்சம் தங்கம் சிக்கியது

மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.22½ லட்சம் தங்கம் சிக்கியது
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பெரும் அளவில் கடத்தப்பட்டு வருவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதையொட்டி விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த இப்ராகீம் (வயது 40) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவருடைய உடமைகளை சோதனை செய்தபோது, அவற்றில் சந்தேகப்படும்படி ஏதும் இல்லை. அதே சமயம் அவர் கொண்டு வந்திருந்த மேஜை மின்விசிறியில் ஏதேனும் இருக்கலாம் என அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அதனை பிரித்து பார்த்தபோது அதில் தங்க சங்கிலி மற்றும் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மலேசியாவில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த முகமது (40) என்பவர் குடியுரிமை பகுதியில் சோதனைகளை முடித்துக் கொண்டு வெளியே செல்லும் முன் விமானநிலைய கழிவறைக்கு சென்றார்.

இதனை பார்த்து சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்து சென்றனர். அங்கு அவர் 2 பொட்டலங்களை எடுத்து மறைத்து வைத்தபோது அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.

பின்னர் அந்த பொட்டலங்களை பிரித்து பார்த்தபோது 2 தங்க கட்டிகள் இருந்தன. பின்னர் ரூ.12 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

2 பேரிடமும் இருந்து மொத்தம் ரூ.22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 750 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய சுங்க இலாகா அதிகாரிகள் இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com