சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடி விற்ற 2 பேர் கைது

சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன்களை திருடி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 54 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடி விற்ற 2 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்கள் அதிகஅளவில் திருடு போவதாக, சென்டிரல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு முருகன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் சென்டிரல் ரெயில் நிலையம் முழுவதும் நேற்று தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சென்டிரல் புறநகர் ரெயில் நிலைய வளாகத்தில் டிக்கெட் கவுண்ட்டர் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். போலீசாரிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் விலையுயர்ந்த 2 செல்போன்கள் இருந்தன.

அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர், சென்னை பெரியமேடு பகுதியை சேர்ந்த ஷான்பாஷா(வயது 42) என்பதும், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகளின் செல்போன்களை திருடி வந்ததும், இவ்வாறு திருடிய செல்போன்களை மூர்மார்க்கெட்டில் உள்ள புளியந்தோப்பை சேர்ந்த ஹரிசுதன்(27) என்பவரது செல்போன் கடையில் கொடுத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது.

அவர் அளித்த தகவலின்பேரில் ஹரிசுதனின் செல்போன் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் அங்கு உரிய ஆவணங்கள் இன்றி விற்பனைக்கு வைத்து இருந்த விலை உயர்ந்த 52 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் இருந்து செல்போன்களை திருடியதாக ஷான்பாஷா மற்றும் திருட்டு செல்போன்களை வாங்கி விற்றதாக ஹரிசுதன்(27) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 2 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 54 விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com