சென்னையின் முக்கிய இடங்களில் செல்போன் பறிப்பு: ஆந்திர கொள்ளை கும்பல் தலைவன் கைது

சென்னையின் முக்கிய இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வந்த ஆந்திர கொள்ளை கும்பலை சேர்ந்த தலைவனை போலீசார் கைது செய்தனர்.
சென்னையின் முக்கிய இடங்களில் செல்போன் பறிப்பு: ஆந்திர கொள்ளை கும்பல் தலைவன் கைது
Published on

பெரம்பூர்,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் என பொதுமக்கள் கூடும் முக்கியமான இடங்களில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கும்பல் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.

விசாரணையில் அந்த கும்பலை சேர்ந்த 10 பேர், செங்குன்றத்தை அடுத்த காந்திநகர் பெருமாள் அடிபாதம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 2-ந்தேதி பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் தனிப்படை போலீசார் அவர்கள் 10 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 50 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கும்பலின் தலைவனான ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த ரவி (வயது 28) தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பூக்கடை பகுதியில் கோயம்புத்தூரை சேர்ந்த கணேசன்(56) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் செல்போனை பறித்துச்சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

செல்போனை பறித்துச்சென்ற மர்மநபரின் உருவம் அதில் பதிவாகி இருந்தது. அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் ஆந்திரா கொள்ளை கும்பல் தலைவன் ரவி என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீசார் ரவியை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.85 ஆயிரம், மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு அவரை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com