செய்யூர் அருகே சென்னை மீனவர் வெட்டிக்கொலை

செய்யூர் அருகே சென்னை மீனவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
செய்யூர் அருகே சென்னை மீனவர் வெட்டிக்கொலை
Published on

மதுராந்தகம்,

சென்னை காசிமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்ற அட்டுரமேஷ்(வயது 44). மீனவர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதே பகுதியை சேர்ந்த சொரிகுப்பன் என்பவரை கொலை செய்த வழக்கில் சிறை சென்றிருந்தார்.

பின்னர் ஜாமீனில் வந்து மற்றொரு வழக்கில் சிறை சென்று கடந்த 3-ந்தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கடப்பாக்கம் வாடகை வீட்டில் முதல் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்தார். வழக்கு ஒன்றில் தினமும் சென்னை காசிமேடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்து இடுமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

நேற்று காலை 5 மணி அளவில் சென்னை காசிமேடு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலை கடப்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவரை விரட்டிச்சென்று கத்தியால் சரமாரியாக தலை, கை போன்ற இடங்களில் வெட்டி விட்டு தப்பிச்சென்றுவிட்டனர். இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

முன்விரோதம் காரணமாக...

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சூனாம்பேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், கொலை செய்யப்பட்ட ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து ரமேஷின் முதல் மனைவி ரேஷ்மா சூனாம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில்:-

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த சொரிகுப்பன் என்பவரை கொலை செய்த வழக்கில் முன்விரோதம் காரணமாக அவரது மகன் தினேஷ் மற்றும் உறவினர்கள் எனது கணவரை கொன்று இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின்பேரில் மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு கவின்னா, சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன், திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனி சேகர் ஆகியோர் தலைமையில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

கொலை செய்யப்பட்ட ரமேஷுக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ரேஷ்மா மூலம் 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் ஒரு மகளை செய்யூர் அடுத்த கிழக்கு கடற்கரை சாலை கடப்பாக்கத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர் ஜாமீனில் வெளிவந்த பிறகு தனது மகள் வீட்டின் அருகே கடப்பாக்கத்தில் வாடகை வீட்டில் முதல் மனைவியுடன் வசித்து வந்தார்.

2-வது மனைவி காயத்ரி சென்னை ஆவடியில் ஒரு மகன், ஒரு மகளுடன் வசித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com