

சென்னை,
சென்னை ஓட்டேரி பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன். இவருடைய மகன் அஜய்(வயது 15). இவர், அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறையை முன்னிட்டு அஜய், சென்னை அயனாவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார்.
நேற்று முன்தினம் மாலை அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் உள்ள தனது உறவினரின் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி 3-வது மாடியில் இருந்து அஜய் கீழே விழுந்து விட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், மாணவர் அஜய் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.