சென்னைக்கு நூதன முறையில் ரூ.20 லட்சம் தங்கம் கடத்தல் வாலிபர் கைது

துபாயில் இருந்து சென்னைக்கு நூதன முறையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கடத்தி வந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னைக்கு நூதன முறையில் ரூ.20 லட்சம் தங்கம் கடத்தல் வாலிபர் கைது
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த ஷேக் உசேன் (வயது 32) என்பவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை.

ஆனால் அவர் அணிந்துவந்த பேண்ட் சற்று வித்தியாசமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், ஷேக் உசேனை தனி அறைக்கு அழைத்துச்சென்று அவரது பேண்ட்டை கழற்றி சோதனை செய்தனர்.

அதில், பேண்ட்டில் பெல்ட் அணியும் பகுதியின் உள்புறத்தில் 650 கிராம் தங்க கட்டிகளை தட்டையாக்கி அதன்மீது டேப் ஒட்டி அதை பேண்ட் துணிக்கு இடையே மறைத்து வைத்து நூதன முறையில் கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை கைப்பற்றிய அதிகாரிகள், இது தொடர்பாக ஷேக் உசேனை கைது செய்தனர்.

மேலும் அவர், அந்த தங்கத்தை யாருக்காக துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தார்?. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com