சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயர் கடத்தி கொலை தண்டவாளத்தில் உடல் வீச்சு

சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயரை கடத்தி கொடூரமாக கொலை செய்து, அவரது உடலை மர்ம நபர்கள் ரெயில் தண்டவாளத்தில் வீசி சென்றனர்.
சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயர் கடத்தி கொலை தண்டவாளத்தில் உடல் வீச்சு
Published on

ராயக்கோட்டை,

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் சையத் தன்வீர் அகமத் (வயது 35). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இதே கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த ஷில்பா (32) என்பவர் எம்.எஸ்சி. படித்து வந்தார். அப்போது இவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. 2 பேரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்.

ஷில்பா மதுரையில் பிறந்தாலும், பின்னர் பெங்களூரு ராஜாஜி நகரில் வளர்ந்தவர் ஆவார். ஷில்பாவின் தாய் பிரிக்கெட் சத்தியராணி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சையத் தன்வீர் அகமத்-ஷில்பாவின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அவர்கள் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பிறகு சையத் தன்வீர் அகமத் அயர்லாந்து நாட்டில் உள்ள பிரபல நிறுவனம் ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். ஷில்பாவும் கணவருடன் தங்கி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் ஷில்பா 7 மாத கர்ப்பமாக இருந்தார்.

இதனால் அவரை பிரசவத்திற்கு தாய் வீட்டில் விடுவதற்காக சையத் தன்வீர் அகமத், மனைவி ஷில்பாவை அழைத்துக்கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைக்கு வந்தார். பின்னர் ஷில்பாவின் தாயார் வீட்டில் சையத் தன்வீர் அகமத்-ஷில்பா ஆகிய 2 பேரும் கடந்த ஒரு மாதமாக தங்கி இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த 12-ந் தேதி காலை பெங்களூருவுக்கு சென்று வருவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சையத் தன்வீர் அகமத் சென்றார். பெங்களூரு மடிவாளா பகுதியில் இருந்து தான் அங்கு சென்று விட்டதாக தனது மனைவிக்கு செல்போனில் மெசேஜ் செய்திருந்த அவர், பின்னர் தான் ஓசூர் வந்து விட்டதாக அன்று மாலை 4 மணி அளவில் மெசேஜ் செய்தார். ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதுகுறித்து ஷில்பா கடந்த 13-ந் தேதி ராயக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ராயக்கோட்டை ரெயில் நிலையம் அருகில் சாதேகொள்ளு மாரியம்மன் கோவில் எதிரில் ரெயில் தண்டவாளத்தில் சையத் தன்வீர் அகமத் பிணமாக கிடந்தார். அவரது தலையின் பின்பகுதி பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டும், உடலில் பல இடங்களில் ரத்தமாகவும் இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சையத் தன்வீர் அகமத் காதல் திருமணம் செய்ததால் அவரது குடும்பத்துடன் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் பெங்களூருவில் அவர் ரூ.1 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கி உள்ளார். மேலும் வேறு ஒரு சொத்தை வாங்க அவர் ஏற்பாடு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் அவர் கடத்தி கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், சையத் தன்வீர் அகமதை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com