சிதம்பரம் அருகே பரபரப்பு: கல்லால் அடித்து பெண் கொலை - பெயிண்டரின் மனைவி வெறிச்செயல்

சிதம்பரம் அருகே கல்லால் அடித்து பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெயிண்டரின் மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிதம்பரம் அருகே பரபரப்பு: கல்லால் அடித்து பெண் கொலை - பெயிண்டரின் மனைவி வெறிச்செயல்
Published on

சிதம்பரம்,

சிதம்பரம் அடுத்த சி.கொத்தங்குடியில் உள்ள வரதராஜநகரை சேர்ந்தவர் பக்கிரி சாமி. இவரது மனைவி செல்வி(வயது 49). இவர் அந்த பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை செல்விக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செல்வியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

முன்னதாக நேற்று காலை 8 மணிக்கு செல்வியின் உறவினரான சி.கொத்தங்குடியில் உள்ள திடல் மேடு ஜி.ஆர்.நகரை சேர்ந்த குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் முருகானந்தம் மனைவி அம்பிகா(34) என்பவருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் குமாரின் வீட்டுக்கு சென்றிருந்த செல்வி, தகராறை விலக்கி விட்டார். அப்போது அம்பிகா, செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதில் ஆத்திரமடைந்த அம்பிகா, அங்கு கிடந்த கல்லை எடுத்து செல்வியின் தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கி உள்ளார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அம்பிகாவிடம் இருந்து செல்வியை மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் தனது வீட்டுக்கு சென்ற செல்வி சிறிது நேரத்தில், மயங்கி விழுந்து, உயிரிழந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து குமார் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது அத்தை செல்வியின் சாவுக்கு அம்பிகா தான் காரணம் என்று தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து, அம்பிகாவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com