சிதம்பரத்தில்: குடிபோதையில் மினிபஸ் ஓட்டிய 2 டிரைவர்களின் உரிமம் ரத்து - போலீசார் நடவடிக்கை

சிதம்பரத்தில் குடிபோதையில் மினிபஸ் ஓட்டிய 2 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சிதம்பரத்தில்: குடிபோதையில் மினிபஸ் ஓட்டிய 2 டிரைவர்களின் உரிமம் ரத்து - போலீசார் நடவடிக்கை
Published on

சிதம்பரம்,

சிதம்பரம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், மகாலிங்கம் மற்றும் போலீசார் உழவர் சந்தை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிதம்பரம் பஸ் நிலையத்தில் இருந்து மேலமூங்கிலடி கிராமத்திற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு மினிபஸ் ஒன்று சென்றது. அந்த பஸ்சை போக்குவரத்து போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, மினிபஸ் டிரைவர் தொப்பையன் தெருவை சேர்ந்த பிச்சபிள்ளை மகன் நடராஜன் (வயது 36) என்பவர் மது அருந்திவிட்டு மினிபஸ் இயக்கியது தெரியவந்தது. இதையடுத்து அவரது ஓட்டுனர் உரிமத்தை போலீசார் ரத்து செய்து, ரூ.2,500 அபராதம் விதித்தனர்.

இதே போல் சிதம்பரத்தில் இருந்து கீழமூங்கிலடிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மற்றொரு மினிபஸ்சை மடக்கி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் இளையபாலச்சேரி பகுதியை சேர்ந்த மணி மகன் இளையராஜா (37) என்பதும், அவர் மது குடித்துவிட்டு மினிபஸ்சை இயக்கி வந்தததும் தெரியவந்தது. இதையடுத்து இளையராஜாவின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து ரூ.2,500 அபராதம் விதித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com