

புதுச்சேரி,
புதுவை முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நேற்று முன்தினம் தனது மனைவியை பிரசவத்திற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.
அந்த குழந்தை இறந்ததற்கு டாக்டர்கள் தான் காரணம் எனக்கூறி அந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று மருத்துவமனையில் திரண்டு டாக்டர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் கோரிமேடு போலீசார் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.