ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
Published on

நாகர்கோவில்,

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. அழகான ஆண் குழந்தை பிறந்தது.

நிறைமாத கர்ப்பிணி

குமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே உள்ள தெங்கன்திட்டை விளையை சேர்ந்தவர் கணேஷ், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி அனிதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் அனிதா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை ராஜாக்கமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக நேற்று முன்தினம் காலை அனுமதித்தனர்.

ஆம்புலன்சில் பிரசவம்

இந்தநிலையில் நள்ளிரவில் அவருக்கு பிரசவம் பார்ப்பதற்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத ஆஸ்பத்திரி அருகே இருந்த 108 ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அனிதாவை ஏற்றிக்கொண்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. ஆனால் நடுவழியிலேயே அனிதாவுக்கு பிரசவ வலி அதிகமானது.

அதைத்தொடர்ந்து ஆம்புலன்சில் அனிதாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்சில் இருந்த பெண் மருத்துவ உதவியாளர் கார்த்தியாயினி பிரசவம் பார்த்தார். அதைத்தொடர்ந்து தாயும், குழந்தையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர்.

பாராட்டு

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் கார்த்தியாயினி மற்றும் டிரைவர் ஆன்றோ விதிஷ்ராஜா ஆகியோரை அனிதாவின் குடும்பத்தினர் பாராட்டினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com