குழந்தைகளின் வருகை பதிவேட்டை பராமரிக்காத அங்கன்வாடி அமைப்பாளர் மீது நடவடிக்கை

குழந்தைகளின் வருகை பதிவேட்டை பராமரிக்காத அங்கன்வாடி அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகளின் வருகை பதிவேட்டை பராமரிக்காத அங்கன்வாடி அமைப்பாளர் மீது நடவடிக்கை
Published on

ஓமலூர்,

ஓமலூர் அருகே கூ.குட்டப்பட்டி ஊராட்சி காஞ்சேரியில் நேற்று மாவட்ட கலெக்டர் ரோகிணி திடீரென ஆய்வு செய்தார். அப்போது அவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு நடத்தினார். அங்கன்வாடி மையத்தை சுற்றி செடி, கொடிகள் புதர்மண்டி கிடப்பதை பார்த்து காடையாம்பட்டி ஒன்றிய ஆணையாளர் சொக்கலிங்கத்திடம், உடனடியாக புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

மேலும் அந்த அங்கன்வாடி மையத்தில் 7 குழந்தைகளே இருந்தனர். தொடர்ந்து குழந்தைகளிடம் கலெக்டர் ரோகிணி பேசினார். பின்னர் அவர் குழந்தைகளின் எடையை ஆய்வு செய்தார். அப்போது எடை குறைந்து இருப்பதையும், வருகை பதிவேடு பராமரிக்காததையும் பார்த்தார். இதன் காரணமாக அங்கன்வாடி அமைப்பாளர் தேவி மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் ரோகிணி, ஒன்றிய ஆணையாளருக்கு உத்தரவிட்டார்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் கட்டப்பட்டுள்ள தனிநபர் கழிப்பிடங்களை பார்வையிட்டார். இதனைதொடர்ந்து மோளகரட்டூரில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். டேனிஷ்பேட்டையில் உள்ள அரசு விதை பண்ணையில் நபார்டு திட்டத்தில் நடந்து வரும் ரூ.30 லட்சத்தில் கிணற்றை ஆழப்படுத்தி சுற்றுச்சுவர் கட்டும் பணியையும், டேனிஷ்பேட்டை ஏரியில் இருந்து பண்ணை நிலத்துக்கு வரும் கான்கிரீட் கால்வாய் சீரமைக்கும் பணியையும், தென்னை நாற்று பண்ணையில் ரூ.49 லட்சத்தில் நடைபெறும் விதை கிடங்கு மற்றும் வேலி அமைக்கும் பணியையும் கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.

மேலும் ரூ.1.38 கோடி மதிப்பில் அரசு விதை பண்ணையில் நடைபெறும் வளர்ச்சி பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். ஆய்வின் போது காடையாம்பட்டி தாசில்தார் பெரியசாமி, ஒன்றிய ஆணையாளர் சொக்கலிங்கம், வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜ் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com