பென்குயின்களை பாதுகாக்க பல்லாயிரம் கோடி வருமானத்தை நிராகரிக்கும் சிலி அரசு

பென்குயின் பறவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுவதால், நூறு கோடி டாலர் மதிப்புள்ள சுரங்கப் பணிகளை சிலி நாட்டு அரசு நிராகரித் திருக்கிறது.
பென்குயின்களை பாதுகாக்க பல்லாயிரம் கோடி வருமானத்தை நிராகரிக்கும் சிலி அரசு
Published on

பென்குயின் பறவைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுவதால், நூறு கோடி டாலர் மதிப்புள்ள சுரங்கப் பணிகளை சிலி நாட்டு அரசு நிராகரித் திருக்கிறது.

சிலி நாட்டின் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள கோகிம்போ பகுதியில் பல லட்சம் டன் இரும்புத்தாதை அகழ்ந்து எடுக்கவும், புதிய துறைமுகத்தை கட்டியமைக்கவும் அன்டர்ஸ் அயன் என்ற நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்தது.

சிலியில் ஹம்போல்ட் பாதுகாக்கப்பட்ட காடுகளைக் கொண்ட தீவுகளுக்கு மிகவும் அருகில் கோகிம்போ உள்ளது.

பென்குயின்கள், நீலத் திமிங்கலம், செதில் திமிங்கலம், கடல் நாய்கள் என அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள 80 சதவீத உயிரினங்களின் தாயகமாக இந்தப் பகுதி விளங்குகிறது.

எனவே இப்பகுதியில் சுரங்கப் பணிகளை மேற்கொள்ள அனுமதிப்பதில்லை என்று சிலி அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவு, தொழில்நுட்ப அடிப்படையிலும், அரசு சார்பில்லாத 14 நிறுவனங்கள் அளித்த சான்றுகளின் அடிப்படையிலும் எடுக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது பற்றி சிலி சுற்றுச்சூழல் அமைச்சர் மார்செலோ மினா கூறுகையில், நான் வளர்ச்சியை உறுதியாக நம்புகிறேன். ஆனால், அந்த வளர்ச்சி எமது சுற்றுச்சூழலை அழித்துவிட்டு அல்லது சுகாதாரத்துக்கோ, உலகிலேயே தனிச்சிறப்புமிக்க சுற்றுச்சூழல் பகுதிகளுக்கோ ஊறு விளைவித்துப் பெற்றுக்கொள்வதாக இருக்கக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

சுரங்க அகழ்வுக்கும், சிலி நாட்டுக்கும் இந்த முடிவு மோசமானது என்று சிலியின் தேசிய சுரங்க அகழ்வு நிறுவனத்தை மேற்கோள்காட்டி ஸ்பானிய செய்தி நிறுவனமான இபே செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அன்டர்ஸ் அயன் நிறுவனம் மேல்முறையீட்டு வழக்குத் தொடுக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் சிலி அரசின் இந்த முடிவுக்கு பாராட்டுகளும் ஒருபக்கம் குவிந்து கொண்டிருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com