

நாமக்கல்,
இயேசு கிறிஸ்து உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும், அதற்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமையை குருத்தோலை ஞாயிறாகவும் கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். சிலுவையில் அறையப்படும் முன்பு ஜெருசலேம் நகருக்கு வந்த இயேசு கிறிஸ்துவை கோவேறு கழுதை மீது அமர வைத்து பவனியாக அழைத்து வந்தனர். அப்போது தாவீதின் குமாரருக்கு ஓசன்னா என பாடல்கள் பாடியவாறு அவரை மகிமைபடுத்தினர்.
இந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் குருத்தோலை ஞாயிறு அன்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக செல்வது வழக்கம். அந்த வகையில் நேற்று நாமக்கல் கிறிஸ்து அரசர் தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பாதிரியார் பிரான்சிஸ் தலைமை தாங்கினார்.
சிறப்பு பிரார்த்தனை
தேவாலயம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் துறையூர் சாலை, போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது. பின்னர் அங்கு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதேபோல் நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள பொன்நகர் கிறிஸ்தவ தேவாலயத்திலும் நேற்று கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
இதேபோல் நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலங்களில் நேற்று குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.