ரூ.5 லட்சம் மோசடி செய்தவர்களை தேடிவந்த கர்நாடக போலீசாரை சிறைபிடித்த பொதுமக்கள்

ரூ.5 லட்சம் மோசடி செய்தவர்களை தேடிவந்த கர்நாடக போலீசாரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ.5 லட்சம் மோசடி செய்தவர்களை தேடிவந்த கர்நாடக போலீசாரை சிறைபிடித்த பொதுமக்கள்
Published on

நாமக்கல்,

நாமக்கல் கொசவம்பட்டி வ.ஊ.சி. நகருக்கு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் 3 பேர் ஒரு காரில் வந்தனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள சில வீடுகளை செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் 3 பேரையும் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அவர்களிடம் அப்பகுதி பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் கர்நாடக மாநில போலீசார் எனவும், மோசடி நபர்கள் சிலரை தேடி வந்து இருப்பதாகவும் கூறினர்.

இதற்கிடையே தகவல் கிடைத்து அங்கு வந்த நாமக்கல் போலீசார் அவர்கள் 3 பேரையும் மீட்டு காருடன் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களிடம் கேட்டபோது, கர்நாடகாவில் நாமக்கல்லை சேர்ந்த சிலர் யாகம் வளர்ப்பதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்து விட்டு தப்பி இருப்பதும், அது தொடர்பாக அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருவதும் தெரியவந்தது.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக போலீசார் தேடும் நபர் ஒருவரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்ததில் , அவர் நாமக்கல்லில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததாகவும், அதன் பேரிலேயே அந்த நபரை பிடிக்க அங்கு சென்றதாகவும் கூறினர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தை கடத்தல் வதந்தி பரவி வரும் நிலையில் உள்ளூர் போலீசார் உதவி இன்றி, கர்நாடக போலீசார், மோசடி நபர்களை தேடி வந்தபோது பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com