தாளவாடி அருகே குளத்தில் மண் அள்ளிய டிராக்டர்களை சிறைபிடித்த பொதுமக்கள்

தாளவாடி அருகே குளத்தில் மண் அள்ளிய 2 டிராக்டர்களை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாளவாடி அருகே குளத்தில் மண் அள்ளிய டிராக்டர்களை சிறைபிடித்த பொதுமக்கள்
Published on

தாளவாடி,

தாளவாடி அடுத்த ஆசனூரில் கும்பேஷ்வர குளம் உள்ளது. சுமார் 60 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த குளத்தில் கடந்த சில நாட்களாக டிராக்டர் மூலம் மண் அள்ளப்பட்டு விவசாயம் மற்றும் வீடுகளுக்கு சிலர் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இந்த குளத்தில் இருந்து மண் அள்ளிக்கொண்டு 2 டிராக்டர்கள் சென்று கொண்டிருந்தன. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அந்த 2 டிராக்டர்களையும் தடுத்து நிறுத்தினர். பின்னர் டிராக்டர்களை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அளவுக்கு அதிகமாக...

இதுபற்றி அறிந்ததும் ஆசனூர் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் கூறும்போது, இங்கு உள்ள குளத்தில் கடந்த சில நாட்களாக டிராக்டர் மூலம் அதிக அளவில் மண் அள்ளப்பட்டு வருகிறது. ஆனால் குறிப்பிட்ட அளவை விட அதிக அளவில் மண் அள்ளப்படுகிறது.

இதனால் சாலைகள் பழுதடைந்துவிட்டது. எனவே குளத்தில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், உங்கள் கோரிக்கையை வருவாய் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com