சித்ரதுர்காவில் பயங்கரம்: பேய் பிடித்து இருப்பதாக கூறி பிரம்பால் தாக்கியதில் 3 வயது குழந்தை சாவு - கோவில் பூசாரி கைது

சித்ரதுர்காவில் பேய் பிடித்து இருப்பதாக கூறி பிரம்பால் தாக்கியதில் 3 வயது குழந்தை பரிதாபமாக செத்தது. இதையடுத்து கோவில் பூசாரியை போலீசார் கைது செய்தனர்.
சித்ரதுர்காவில் பயங்கரம்: பேய் பிடித்து இருப்பதாக கூறி பிரம்பால் தாக்கியதில் 3 வயது குழந்தை சாவு - கோவில் பூசாரி கைது
Published on

சித்ரதுர்கா,

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா அஜ்ஜிகாட்டனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ஷியாமாலா. இந்த தம்பதிக்கு 3 வயதில் பூர்விகா என்ற மகள் இருந்தாள். இந்த குழந்தை கடந்த சில நாட்களாக பகல்-இரவாக தூங்காமல் இருந்து வந்தது. அதுபோல் கடந்த 3 நாட்களாக சாப்பிடாமல் இருந்துள்ளது.

இதனால் பயந்துபோன குழந்தையின் பெற்றோர், அந்தப் பகுதியில் உள்ள சவுடம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அந்த கோவிலின் பூசாரியான ராகேஷ் (வயது 19) என்பவரிடம் குழந்தையை காட்டி, சம்பவம் பற்றி கூறியுள்ளனர். அதற்கு அவர் குழந்தைக்கு பேய் பிடித்து இருப்பதாகவும், அதற்கு பூஜை செய்தால் பேயை விரட்டிவிடலாம், அதன் பின்னர் குழந்தை சரியாக தூங்கும், நன்றாக சாப்பிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு குழந்தையின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று குழந்தைக்கு பேயை விரட்டுவதாக கூறி ராகேஷ் தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் வீட்டில் வைத்து சிறப்பு பூஜை செய்த ராகேஷ், குழந்தையை பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார்.

இதனால் திடீரென்று குழந்தை மயக்கம் போட்டு விழுந்தது. இதையடுத்து குழந்தை பூர்விகாவை, அதன் பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு ராகேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் பயந்துபோன பிரவீன்-ஷியாமாலா தம்பதி, உடனே ஒரு வாகனத்தில் குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் பெற்றோர் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் அவர்கள், குழந்தையின் சாவுக்கு பூசாரி ராகேஷ் தான் காரணம் என்று குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிக்கஜாஜூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பேய் பிடித்து இருப்பதாக கூறி குழந்தையை பூசாரி ராகேஷ் பிரம்பால் அடித்ததும், அதனால் குழந்தை வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்து செத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ராகேசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்தப் பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com