வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி போலி விசா தயாரித்து மோசடி செய்த 3 பேர் கைது

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி போலி விசா தயாரித்து மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி போலி விசா தயாரித்து மோசடி செய்த 3 பேர் கைது
Published on

போத்தனூர்,

கோவை பி.கே.புதூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 34), இந்திரா நகரை சேர்ந்த அசோக் (29), பிள்ளையார்புரத்தை சேர்ந்த நிவீஸ் (27) ஆகியோர் குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் ஸ்மார்ட் டார்ட் இன்டர்நேஷனல் என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிறுவனம் மூலம் பட்டதாரி இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அறிவிக்கப்பட்டது. இதை நம்பி ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளனர்.

பின்னர் அவர்களுக்கு வேலைக்கான விசா மற்றும் ஆவணங்களை கொடுத்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு செல்லும்படி கூறினார்கள். அவற்றை வாங்கிய இளைஞர்கள் அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் கொடுத்தபோது அவை போலியானது என்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அருண்குமார், அசோக், நிவீஸ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர்கள் போலி ஆவணங்கள் மூலம் விசா தயாரித்து இளைஞர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. இதை யடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீசார் கூறியதாவது:-

கைதான 3 பேரும் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் வேலை செய்ய விரும்பும் பட்டதாரி இளைஞர்களை குறிவைத்து ஆசை வார்த்தை கூறி கவர்ந்துள்ளனர். பின்னர் அவர்களிடம் அமெரிக்கா, கத்தார் உள்பட வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் வேலை செய்வதற்கான பணிநியமன ஆணை, விசா ஆகியவற்றை போலியாக தயாரித்து கொடுத்து உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக இதுபோன்று அவர்கள் மோசடியில் ஈடுபட்டு உள்ளனர். கள்ளக்குறிச்சியை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் ரூ.2 லட்சம் பெற்று அவருக்கு போலி விசா மற்றும் பணி நியமன ஆணையை கொடுத்து உள்ளனர். அதிகாரிகள் அந்த ஆவணத்தை சரிபார்த்தபோது அது போலி என்பதால் அவரை திருப்பி அனுப்பினார்கள்.

இதனால் அவர் சொந்த ஊருக்கு செல்ல விரும்பாமல் கடந்த 7 மாதங்களாக கோவையில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இதுபோன்று பல இளைஞர்களிடம் இவர்கள் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து உள்ளனர். எனவே இதுபோன்ற மோசடி நபர்களிடம் இளைஞர்கள் சிக்கி ஏமாற வேண்டாம். அத்துடன் ஏமாந்தவர்கள் தாராளமாக புகாரும் செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com