தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள்

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள்
Published on

ஊட்டி,

தமிழக சுகாதாரத்துறை உத்தரவின்படி நீலகிரி மாவட்டத்தில் கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட ஊட்டி காந்தல், குன்னூர் ராஜாஜி நகர், கோத்தகிரி கடைவீதி, எஸ்.கைகாட்டி ஆகிய 4 பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ஊட்டி காந்தலில் தூய்மை பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சத்து மாத்திரைகள்

மேலும் வைட்டமின் சி, டி சத்து மற்றும் ஜிங்க் மாத்திரை தினமும் காலை, இரவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றுக்கூறி சுகாதாரத்துறையினர் வழங்கினர். மேலும் 50 கிராம் கொண்ட கபசுர பொடி கொண்ட பொட்டலங்கள் வழங்கப்பட்டன. வீடு, வீடாக சென்று அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்கும் தன்னார்வலர்களுக்கும் கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளி விட்டு பெற்று சென்றனர்.

சளி மாதிரி

ஒரு நபர் 5 கிராம் கபசுர பொடியை 200 மில்லி லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து 50 மில்லி லிட்டர் அளவாக சுருக்கி குடிக்கலாம். பெரியவர்கள் 50 மி.லி., சிறியவர்கள் 20 மி.லி. முதல் 30 மி.லி. வரை அருந்தலாம். 1 வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை கபசுர குடிநீரை குடிக்கலாம். கபசுர பொடியில் 15 மூலிகைகள் அடங்கி உள்ளன. மருத்துவ குணம் உடையது. இதை குடிப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறையினர் கூறினர். மேலும் தன்னார்வலர்கள் 40 பேருக்கு நடமாடும் வாகனம் மூலம் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டது. இந்த மாதிரி குன்னூர் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com