பூலாம்வலசுவில் 2-வது நாளாக களை கட்டிய சேவல் சண்டை

பூலாம்வலசுவில் 2-வது நாளாக சேவல் சண்டை களை கட்டியது.
பூலாம்வலசுவில் 2-வது நாளாக களை கட்டிய சேவல் சண்டை
Published on

அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம் அரவக் குறிச்சி அருகே பூலாம் வலசு கிராமத்தில் ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே தொன்று தொட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாக பொழுதுபோக்கிற்காகவும், வீரவிளையாட்டாகவும் சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டதன் காரணமாக, சேவல் சண்டை நடத்த மதுரை ஐகோர்ட்டு தடை விதித்தது.

இதனால் கடந்த 4 ஆண்டுகளாக சேவல் சண்டை நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்த மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி வழங்கியதையடுத்து, நேற்று முன்தினம் காலை பூலாம்வலசுவில் சேவல் சண்டை தொடங்கியது. நேற்று 2-வது நாளாக களை கட்டிய சேவல் சண்டையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சண்டை சேவல்களை கொண்டு வந்து போட்டியில் பலர் பங்கேற்க செய்தனர். சனிக்கிழமை என்பதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் சேவல் சண்டையை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து கோர்ட்டு விதித்த நிபந்தனைகளை பின்பற்றி மைதானத்தில் ஆங்காங்கே இரண்டு சேவல்களை மோத விட்டு போட்டிகள் நடந்தன. அப்போது சேவல்கள் ஆக்ரோஷமாக சண்டையிட்டதை பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து கண்டு களித்தனர்.

அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத் தமிழ்செல்வன் தலைமை யிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்க விதிப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதாக வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) சேவல் சண்டை நிறைவு பெற இருக்கிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com