தென்னை மரங்கள், வீட்டை உடைத்த விநாயகன் காட்டு யானை

கூடலூர் அருகே தென்னை மரங்கள், தொழிலாளி வீட்டை விநாயகன் என்ற காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் யானையை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தென்னை மரங்கள், வீட்டை உடைத்த விநாயகன் காட்டு யானை
Published on

கூடலூர்

கூடலூர் அருகே தென்னை மரங்கள், தொழிலாளி வீட்டை விநாயகன் என்ற காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் யானையை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

காட்டு யானை

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் விநாயகன் என அழைக்கப்படும் காட்டு யானை முதுமலை வனத்தில் இருந்து தினமும் வெளியேறி ஊருக்குள் வருகிறது. தொடர்ந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விநாயகன் காட்டு யானையை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் கால்நடைகளை புலி தாக்கி கொன்றது. இதனால் புலியை பிடிக்கக்கோரியும், விநாயகன் காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கூடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து விநாயகன் காட்டு யானை ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக முதுமலையில் இருந்து 4 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

மரங்கள், வீட்டை சேதப்படுத்தியது

இருப்பினும் அந்த காட்டு யானை தொடர்ந்து ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகிறது. ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மேலம்பலம் ஆதிவாசி கிராமத்துக்குள் விநாயகன் காட்டு யானை இரவு புகுந்தது. பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த கயம்மன் என்ற ஆதிவாசி பெண்ணின் வீட்டை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது.

தொடர்ந்து வீட்டில் இருந்த அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை காட்டு யானை சாப்பிட்டதுடன் அவற்றை சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து சென்ற காட்டுயானை அப்பகுதியில் நின்றிருந்த தென்னை மரங்களை சரித்து போட்டு நாசம் செய்தது.

பொதுமக்கள் பீதி

இதையறிந்த கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் பீதியுடன் வீடுகளுக்குள் முடங்கினர். அதிகாலை வரை அப்பகுதியில் நின்றிருந்த காட்டு யானை பின்னர் முதுமலை வனப்பகுதிக்குள் சென்றது. தொடர்ந்து இந்த காட்டு யானையின் அட்டகாசம் காரணமாக ஆதிவாசி மக்கள் மற்றும் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com