கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற குழந்தை உள்பட 3 பேர் பலி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 191 பேர் உள்பட மொத்தம் 241 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற குழந்தை உள்பட 3 பேர் பலி
Published on

கோவை

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பெண் குழந்தை உள்பட 3 பேர் பலியாகிவிட்டனர். காய்ச்சல் பாதிப்புக்கு 241 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற துடியலூர் அருகே உள்ள வெள்ளமடை, சாமிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தரணி(வயது 8) என்ற சிறுமியும், ஆனைமலை சக்தி நகரை சேர்ந்த மகாலட்சுமி(7) என்ற சிறுமியும் கடந்த 29-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்கள்.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 2 பேரும், பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஒருவரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று இறந்தனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த பிரசாந்த் என்பவருடைய மகள் நிஷாந்தி(4), டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 29-ந்தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட் டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி நிஷாந்தி பரிதாபமாக இறந்தார்.

கோவை அருகே உள்ள எஸ்.எஸ்.குளத்தை சேர்ந்த துரைசாமி என்பவருடைய மனைவி சாந்தாமணி(44) என்பவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 29-ந்தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்சிங்(32) என்பவர் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் சதீஷ்குமார்சிங் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடல்நலம் மிகவும் குன்றியநிலையில் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். நேற்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றிக்காய்ச்சலுக்கு ஒருவரும் இறந்தனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 191 பேர் உள்பட மொத்தம் 241 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 16 பேர் கடந்த 2 மாதங்களில் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு கடந்த 2 மாதங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர்.காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com