கோவில்பட்டி அருகே கல்லூரி பேராசிரியரை காரில் கடத்தி நகை-பணம் பறிப்பு 4 பேர் கைது

கோவில்பட்டி அருகே கல்லூரி பேராசிரியரை காரில் கடத்தி நகை-பணத்தை பறித்துச் சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அண்ணன், தம்பி உள்பட 6 பேரை தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி அருகே கல்லூரி பேராசிரியரை காரில் கடத்தி நகை-பணம் பறிப்பு 4 பேர் கைது
Published on

கோவில்பட்டி,

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சண்முகசிகாமணி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 53). இவர் லண்டனில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். குடும்பத்துடன் அங்கு தங்கி உள்ளார்.

இந்த நிலையில் ஜெயக்குமார் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்தார். இங்கு அவருக்கு சொந்த வீடு உள்ளது. மேலும் அவர் தனக்கு சொந்தமான இடத்தை ரூ.27 லட்சத்துக்கு விற்றுள்ளார்.

இதனை அறிந்த கோவில்பட்டி பாரதிநரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன்கள் கவியரசன் (28), அமிர்தராஜ் (26) மற்றும் கோவில்பட்டி பல்லக்கு ரோட்டை சேர்ந்த தாமஸ் (24), செல்லப்பாண்டியன்நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (20) உள்பட 10 பேர் ஜெயக்குமார் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு அவரிடம் வெற்றுத்தாளிலும் ஆவணங்களிலும் கையெழுத்து போடுமாறும் மிரட்டி ரூ.5 லட்சம் தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஜெயக்குமாரை வலுக்கட்டாயமாக தங்களது காரில் ஏற்றி கடத்திச் சென்றனர். மந்தித்தோப்பு மலையடிவார பகுதியில் அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த 4 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.42,500 பணத்தையும் பறித்தனர். பின்னர் அவரை அதே காரில் ஏற்றி அவரது வீட்டின் முன்பு இறக்கி விட்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜிடம், ஜெயக்குமார் புகார் செய்தார். அதன் பேரில் மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அய்யப்பன் விசாரணை நடத்தி தாமஸ், ராதாகிருஷ்ணன் உள்பட 4 பேரை கைது செய்தார். கவியரசன், அமிர்தராஜ் உள்ளிட்ட 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com