தாராபுரம் அருகே வேன்கள் மோதல்; ஒருவர் பலி, குழந்தை உள்பட 9 பேர் காயம்

தாராபுரம் அருகே வேன்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார். குழந்தை உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்.
தாராபுரம் அருகே வேன்கள் மோதல்; ஒருவர் பலி, குழந்தை உள்பட 9 பேர் காயம்
Published on

தாராபுரம்,

கோவை அருகே உள்ள செல்வபுரம், கல்லாமேடு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (வயது 28). இவருடைய உறவுக்கார பெண்ணுக்கு, திருநெல்வேலி அருகே உள்ள சுரண்டையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விஜய் முடிவு செய்தார். அதற்காக விஜய், அவரது மனைவி வசந்தி (24), விஜய்யின் உறவினர்கள் ராஜேந்திரன் (32), இவரது மனைவி வனிதா (25) மற்றும் அழகம்மாள், இவரது மகள்கள் வான்மதி (22), தீபா (19) மற்றும் கார்த்திகேயன் (27), மதுரை அருகே உள்ள சாக்கினாப்பட்டியை சேர்ந்த டிரைவர் வடிவேல் (38) மற்றும் 3 வயது குழந்தை ஒன்று என மொத்தம் 10 பேர் ஒரு வேனில் சுரண்டைக்கு சென்றனர்.

அங்கு வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்ததும், அதே வேனில் அனைவரும் கோவைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். வேனை விஜய் ஓட்டினார். இந்த வேன் நேற்று காலை 5.45 மணிக்கு தாராபுரத்தை கடந்து, திருப்பூர் சாலையில் வரப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கோவையிலிருந்து மதுரை நோக்கிச் மற்றொரு வேன் சென்று கொண்டிருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் விஜய் ஓட்டிச்சென்ற வேனும், கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வேனும், நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் விஜய் ஓட்டிச்சென்ற வேன், அப்பளம் போல் நொறுங்கி விட்டதால், அந்த வேனில் இருந்தவர்களால் வெளியில் வரமுடியவில்லை. இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபயக்குரல் எழுப்பினார்கள்.

உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று வேனின் கதவை உடைத்து காயம் அடைந்து வேனுக்குள் சிக்கித்தவித்து கொண்டிருந்த விஜய், வசந்தி, ராஜேந்திரன், வனிதா, அழகம்மாள், வான்மதி, தீபா, கார்த்திகேயன், வடிவேல் மற்றும் 3 வயது குழந்தை ஆகியோரை மீட்டனர். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதற்குள் போலீசாரும் விரைந்து சென்று பொதுமக்களுடன் சேர்ந்து காயம் அடைந்தவர்களை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜய் இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வரப்பாளையம் பகுதியில் 4 வழிச்சாலை திட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், விபத்து நடந்த பகுதியில் சுமார் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com