அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததாக புகார்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததாக பெண்களின் உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்ததாக புகார்
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகள் திவ்யபாரதி (வயது 17). இவர் பிளஸ்-2 படித்து முடித்து உள்ளார். இந்நிலையில் திவ்யபாரதிக்கு நெஞ்சில் கட்டி ஒன்று இருந்தது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் திவ்யபாரதிக்கு நெஞ்சில் ஒரு இடத்தில் கட்டி உள்ளது. இதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து திவ்யபாரதிக்கு கடந்த 30-ந் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று திவ்யபாரதிக்கு தையல் பிரிக்கப்பட்டது. அப்போது திவ்யபாரதி தனக்கு கட்டி உள்ள இடத்தில் அறுவை சிகிச்சை செய்யாமல் வேறு இடத்தில் அறுவை சிகிச்சை செய்து உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து தனது தாயார் ராணியிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ராணி இது குறித்து அப்போது பணியில் இருந்த டாக்டரிடம் கேட்டதற்கு அவர் முறையாக பதில் கூறவில்லை. மேலும் மற்றோரு டாக்டர் இன்னொரு அறுவை சிகிச்சை செய்தால் சரியாகிவிடும் எனக்கூறியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து திவ்ய பாரதியின் உறவினர்கள், திவ்யபாரதிக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்து உள்ளதாகக்கூறி மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரிகள், திவ்யபாரதிக்கு அளிக்கப்பட்டு உள்ள சிகிச்சை முறைகளை ஆய்வு செய்தனர்.

இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், திவ்யபாரதிக்கு தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்யபடவில்லை. திவ்யபாரதி திருமணம் ஆகாது இளம்பெண் என்பதால், அவருக்கு நெஞ்சில் அறுவை சிகிச்சை செய்தால், அந்த இடத்தில் தழும்பு இருக்கும் என்பதால், மாற்று இடத்தில் அறுவை சிகிச்சை செய்து, நவீன தொழில்நுட்ப உதவியுடன் அவருக்கு நெஞ்சில் இருந்த கட்டி அகற்றப்பட்டு உள்ளது.

அறுவை சிகிச்சையின்போது நரம்புகளை வைத்து கட்டி மூடிச்சு போட்டு உள்ளார்கள். இதுதான் கட்டி இருப்பதுபோல் தெரிகிறது என்றார். இந்த சம்பவத்தால் நேற்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பாதுகாப்பு பணிக்காக கணேஷ்நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com