தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் பெற்றதாக புகார்: வேலூர் சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை பதுக்கி வைத்திருந்த ரூ.76 ஆயிரம் சிக்கியது

தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் பேரில் வேலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் பதுக்கி வைத்திருந்த ரூ.76,500 சிக்கியது.
தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சம் பெற்றதாக புகார்: வேலூர் சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ‘திடீர்’ சோதனை பதுக்கி வைத்திருந்த ரூ.76 ஆயிரம் சிக்கியது
Published on

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. சமூக நலத்துறை அதிகாரியாக சாந்தி பணிபுரிந்து வருகிறார். வேலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக கடந்த 22-ந் தேதி 707 பெண்களுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவி ஆகியவற்றை அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் வழங்கினர். அதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் 690 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதியுதவி வழங்கப்பட்டது. 690 பேரிடமும் இருந்து ரூ.500 முதல் ரூ.1,500 வரை சமூகநலத்துறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்று தாலிக்கு தங்கம், நிதியுதவி வழங்கியதாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வேலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் விஜய், எஸ்.விஜயலட்சுமி மற்றும் போலீசார் மாலை 6 மணியளவில் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்றனர். முதற்கட்டமாக அங்கிருந்த பொதுமக்களை வெளியேற்றினர். பின்னர் வெளியாட்கள் உள்ளேயும், அலுவலக ஊழியர்கள் வெளியேயும் செல்லாதபடி அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். தொடர்ந்து சமூக நலத்துறை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனையில் பீரோவின் அடியில், சாமி படத்தின் பின்புறம், கழிவறை, மேசையின் அடியில் என பல பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ரூ.76,500 லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது.

இதுதொடர்பாக மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சாந்தி, கணக்காளர் உள்பட 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரம் அதாவது இரவு 10 மணி வரை நீடித்தது. இந்த சம்பவத்தால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com