பணி நீக்கம் செய்ததை கண்டித்து குளித்தலை அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர், மனைவியுடன் தர்ணா

பணி நீக்கம் செய்ததை கண்டித்து குளித்தலை அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர், மனைவியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பணி நீக்கம் செய்ததை கண்டித்து குளித்தலை அரசு மருத்துவமனை மேற்பார்வையாளர், மனைவியுடன் தர்ணா
Published on

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கீழதண்ணீர்பள்ளியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 39). அவர் தனது மனைவி நந்தினி(30) உடன் நேற்று குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில், பலர் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை மேற்பார்வை செய்யும் மேற்பார்வையாளர்களில் ஒருவராக நான் வேலை செய்து வந்தேன். இந்த நிலையில் வேலை செய்யும் பெண்களிடம் நான் தவறாக நடந்துகொள்வதாக நான் வேலை செய்யும் தனியார் நிறுவனத்தின் மண்டல பொறுப்பாளரான சிவமணி, சென்னையில் உள்ள தலைமை பொறுப்பாளரிடம் தொலைபேசியில் பேசும்போது தெரிவித்தார்.

பின்னர் கடந்த 3-ந் தேதி அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணிபுரியும் கணேசன் என்பவர், நான் சரிவர பணி செய்யவில்லை, வேலையில் திருப்தி இல்லை என்பதால் நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் தன்னை நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவதாக கடிதம் அளித்தார். நான் பணி செய்யும் இடத்தில் எந்த ஒரு பெண்ணிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை. இந்த நிலையில் நான் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதாக கூறியதை கண்டித்தும், அதுபோல தவறாக நடந்து கொண்டிருந்தால் அதை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தனது மனைவியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கணவன்- மனைவியிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு இதுதொடர்பாக விசாரணை செய்த போலீசார், அந்த தனியார் நிறுவனத்தில் மண்டல பொறுப்பாளரான சிவமணியை நேரில் அழைத்து அவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த சுந்தரம் தனது மனைவியுடன் அங்கிருந்து சென்றார். குளித்தலை அரசு மருத்துவமனையின் முன்பு, கணவன்- மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com