மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; ஆட்டோ டிரைவர், கொத்தனார் பலி

வாழப்பாடி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஆட்டோ டிரைவர், கொத்தனார் பலியானார்கள்.
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; ஆட்டோ டிரைவர், கொத்தனார் பலி
Published on

வாழப்பாடி,

சேலம் அருகே தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் மோகன்ராஜ் என்ற ஜெயராமன்(வயது 30), கொத்தனார். இவர் சேலத்தில் இருந்து வேப்பிலைபட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வேப்பிலைபட்டி பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரின் மகனும், ஆட்டோ டிரைவருமான இளையசூரியன்(25) தனது மோட்டார் சைக்கிளில் வெள்ளாளகுண்டத்திற்கு வந்து கொண்டிருந்தார். வெள்ளாளகுண்டம் அரச மர பஸ் நிறுத்தம் அருகே மலைப்பாதையில் அவர்கள் இருவரின் மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றிருந்த ஜெயராமன், இளையசூரியன் ஆகிய இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் பலியான இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. அதே நேரத்தில் ஜெயராமனின் தம்பி பூபதி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதே சாலையில் கட்டிட வேலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சாலை விபத்தில் உயிர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயராமன், பூபதி ஆகிய தங்களின் 2 மகன்களையும் சாலை விபத்தில் பறிகொடுத்த பெற்றோர் ஜெயராமனின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com