திருவிழாவில் தவறவிட்ட 3 பவுன் சங்கிலி-பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

திருவிழாவில் தவறவிட்ட 3 பவுன் சங்கிலி-பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு.
திருவிழாவில் தவறவிட்ட 3 பவுன் சங்கிலி-பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு
Published on

ஆவூர்,

விராலிமலை தாலுகா, மலம்பட்டியில் உள்ள புனித சவேரியார் ஆலய தேர்திருவிழாவில் மலம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மனைவி அஞ்சலை (வயது 24) என்ற பெண் தான் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழட்டி தனது பர்சில் வைத்து கொண்டார். மேலும் அந்த பர்சில் திருவிழா செல்வதற்கான ரூ.2,000 பணமும் அவர் வைத்திருந்தார். பின்னர் தேர்பவனி முடிந்தபிறகு திருவிழா கடையில் பொருட்கள் வாங்குவதற்காக அஞ்சலை தனது பையில் வைத்திருந்த பர்சை தேடி பார்த்தபோது அதில் பர்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எங்கும் தேடி பார்த்தும் பர்ஸ் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து அஞ்சலை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் ஆலய அலுவலகத்தில் இருந்தவர்களிடம் இதுபற்றி கூறினார். இதையடுத்து மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இது குறித்து மைக் மூலம் அறிவிப்பு வெளியிட்டு தங்கசங்கிலி, பணம் வைத்திருந்த மணி பர்சை எடுத்தவர்கள் கோவில் அலுவலகத்திலோ, காவல்துறை வசமோ ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் சிறிது நேரத்தில் அங்கு செருப்பு கடை வைத்துள்ள பெருங்களூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த மணி (வயது 45) என்பவர் அந்த பர்சை எடுத்து வந்து போலீசிடம் கொடுத்தார். இதையடுத்து தங்க சங்கிலி, பணத்தை பங்குத்தந்தை இரட்சகராஜ் மற்றும் மாத்தூர் போலீசார் முன்னிலையில் அஞ்சலையிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் பர்சை எடுத்து கொடுத்த செருப்பு கடைக்காரர் மணியை பங்குதந்தை, போலீசார் மற்றும் அங்குள்ள பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com