காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் காதலனுடன் ரகசிய திருமணம்

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் மகள், தனது காதலனுடன் மைசூரு சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் காதலனுடன் ரகசிய திருமணம்
Published on

மைசூரு,

தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சிவமூர்த்தி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருடைய மகள் லட்சுமி நாயக். சிவமூர்த்தி தனது குடும்பத்தினருடன் பெங்களூரு எலகங்கா நியூடவுன் பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில், லட்சுமி நாயக்கும், கன்னட திரைப்பட தயாரிப்பாளர் சுந்தர் கவுடா என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.

சுந்தர் கவுடா, மாஸ்திகுடி உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்து உள்ளார். இவர்களின் காதல் விவகாரம், லட்சுமி நாயக்கின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும், லட்சுமி நாயக்கும், சுந்தர் கவுடாவும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தனர்.

இந்த நிலையில், லட்சுமி நாயக் திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவமூர்த்தி, அவரை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் லட்சுமி நாயக் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக சிவமூர்த்தி, எலகங்கா போலீசில் புகார் கொடுத்தார். எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி நாயக்கை தேடி வந்தனர்.

இதற்கிடையே வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி நாயக், தனது காதலன் சுந்தர் கவுடாவை மைசூரு சாமுண்டீசுவரி அம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். இதுபற்றி சிவமூர்த்திக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் போலீசில் தெரிவித்தார். இதையடுத்து எலகங்கா போலீசார் மைசூருவுக்கு விரைந்து சென்றனர்.

லட்சுமி நாயக்கும், சுந்தர் கவுடாவும் தங்கியிருப்பதாக கூறிய விடுதிக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். ஆனால், போலீசார் வருவதை முன்கூட்டியே அறிந்த அவர்கள், விடுதியை காலி செய்துவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். இதற்கிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிவமூர்த்தியின் மகள் லட்சுமி நாயக் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் லட்சுமி நாயக் பேசியிருப்பதாவது:-

நானும், சுந்தரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களால் யாருக்கும் தொந்தரவு வேண்டாம் என்பதற்காக நாங்கள் ரகசிய திருமணம் செய்துள்ளோம். என்னை சுந்தர் ஏமாற்றி அழைத்து சென்று திருமணம் செய்துகொள்ளவில்லை. என்னுடைய முழு சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடந்துள்ளது. என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நான் மேஜர். எனக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உண்டு. நான் சுந்தருடன் தான் வாழ்வேன்.

இவ்வாறு அதில் பேசியிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com