மாரடைப்பால் மரணமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருத்ரேஷ் கவுடாவின் உடல் தகனம்

மாரடைப்பால் மரணமடைந்த பேளூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருத்ரேஷ் கவுடாவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவருடைய உடலுக்கு ராகுல்காந்தியும், சித்தராமையாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.
மாரடைப்பால் மரணமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ருத்ரேஷ் கவுடாவின் உடல் தகனம்
Published on

ஹாசன்,

ஹாசன் மாவட்டம் பேளூர் தொகுதியில் கடந்த 2013-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ருத்ரேஷ்கவுடா (வயது 63). காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த 23-ந்தேதி டெல்லி மேல்-சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போடுவதற்காக ஹாசனில் இருந்து பெங்களூருவுக்கு காரில் புறப்பட்டு வந்தார். ருத்ரேஷ்கவுடா பெங்களூரு அருகே வந்தபோது, அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதனால் அவர் உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவருடைய உடல் நேற்று முன்தினம் மதியம் 3.30 மணி அளவில் ஹாசனுக்கு கொண்டு வரப்பட்டது. ஹாசன் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ருத்ரேஷ்கவுடாவின் உடலுக்கு மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமார், மந்திரி ஏ.மஞ்சு ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர், மாலையில் அவருடைய உடல் பேளூருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனியார் ஜூனியர் கல்லூரியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்களும், தொண்டர்களும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். இதையடுத்து நேற்று காலை, ருத்ரேஷ்கவுடாவின் உடல் பேளூர் அம்பேத்கர் நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த நிலையில் ருத்ரேஷ்கவுடா எம்.எல்.ஏ. மரணமடைந்த செய்தி கேட்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நேற்று காலை 11 மணி அளவில் பேளூர் அம்பேத்கர் நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு நேரில் சென்றார். அங்கு அவர் ருத்ரேஷ்கவுடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

ராகுல்காந்தியுடன் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் வந்து ருத்ரேஷ்கவுடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக முன்னாள் பிரதமர் தேவேகவுடாவும் ருத்ரேஷ்கவுடாவின் வீட்டுக்கு சென்று அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து பேளூர் அருகே சீக்கனஹள்ளி கிராமத்தில் உள்ள ருத்ரேஷ்கவுடாவின் தோட்டத்தில் அவருடைய உடலுக்கு இறுதிச்சடங்கு நடந்தது. பின்னர் முழு அரசு மரியாதையுடன் ருத்ரேஷ்கவுடாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக பேளூரில் இருந்து சீக்கனஹள்ளி வரை அவருடைய உடல் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதில் மந்திரி ஏ.மஞ்சு, ரேவண்ணா எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com