நண்பரை கொல்ல சதித்திட்டம்: கைதான சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு - பரபரப்பு தகவல்

குமரியில் நண்பரை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கைதான சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். வேலை தேடி வந்த தொழிலாளர்களை வெட்டியதும் போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
நண்பரை கொல்ல சதித்திட்டம்: கைதான சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 5 பேர் சிறையில் அடைப்பு - பரபரப்பு தகவல்
Published on

ஆரல்வாய்மொழி,

திருச்சி லால்குடியை சேர்ந்தவர் சிவா (வயது 37), புரோட்டோ மாஸ்டர். கோவை சூலூரை சேர்ந்த தொழிலாளர் ராஜேஷ்வரன். இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு வேலை தேடி குமரி மாவட்டத்திற்கு வந்தனர். சம்பவத்தன்று இரவு சிவா தோவாளை பஸ் நிலையத்தில் படுத்திருந்த போது 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். அதேபோல் அவ்வையார் அம்மன் கோவில் பகுதியில் ராஜேஷ்வரன் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

வெட்டப்பட்ட 2 தொழிலாளர்களையும் ஆரல்வாய்மொழி போலீசார் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளர்களை வெட்டியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

அதே நாளில் தோவாளை தேவர்நகரை சேர்ந்த ஜெயராம் என்பவரின் மோட்டார் சைக்கிளும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் பல தகவல்கள் தெரிய வந்தன.

மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் ஜெயராமும், புத்தேரியை சேர்ந்த யோகீஸ்வரனும் (23) நண்பர்கள். இந்தநிலையில், சில பிரச்சினை காரணமாக அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது. ஜெயராமுவை கொல்வதற்காக யோகீஸ்வரன் தனது நண்பர்களான கோட்டாரை சேர்ந்த ராகுல் (19), வடசேரியை சேர்ந்த ரமேஷ் (19), குமாரபுரத்தை சேர்ந்த ஜெபின்ராஜா (36) ஆகியோரை அழைத்து கொண்டு சம்பவத்தன்று ஜெயராம் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு ஜெயராம் இல்லாததால் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தனர். பின்னர் யோகீஸ்வரன் தோவாளை வழியாக வீட்டுக்கு புறப்பட்டனர். தோவாளை பகுதியில் வைத்து புத்தேரியை சேர்ந்த டேவிட் என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றினார். ஏற்கனவே நண்பரை கொல்ல முடியாததால் ஆத்திரத்தில் இருந்த யோகீஸ்வரன், டேவிட்டுடன் சேர்ந்து தோவாளை பஸ் நிலையத்தில் படுத்திருந்த சிவாவை சரமாரியாக வெட்டினார்.

பின்னர் இருவரும் அவ்வையார் அம்மன் கோவில் அருகே சென்ற போது அங்கு நின்றிருந்த கோவை தொழிலாளி ராஜேஸ்வரனையும் வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து யோகீஸ்வரன், ராகுல், ரமேஷ், டேவிட், ஜெபின்ராஜா ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களில் யோகீஸ்வரன், டேவிட் ஆகியோர் மீது தொழிலாளிகளை வெட்டியதாகவும், யோகீஸ்வரன், ராகுல், ரமேஷ், ஜெபின்ராஜா ஆகியோர் மீது மோட்டார் சைக்கிளை எரித்ததாகவும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் ஜெபின்ராஜாவின் தந்தை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com