

புனே,
புனே அருகே உள்ள பிம்பிரி சிஞ்ச்வாட் இண்டஸ்ட்ரீஸ் டவுண்ஷிப் அருகே உள்ள திகியில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் வசித்து வருபவர் அர்ச்சனா. இவர் நேற்று காலை 7.30 மணி அளவில் சமையல் அறையின் மின் விளக்கை போட்டார்.
அப்போது கியாஸ் கசிவு காரணமாக சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த வீட்டுக்கும், அடுத்த வீட்டுக்கும் இடையில் பொது சுவர் இடிந்து விழுந்தது.
ஒருவர் பலி
இந்த விபத்தில் பக்கத்து வீட்டில் இருந்த தியானேஷ்வர் டெம்காரும், அவரது 8 வயது மகளும் சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதில் தியானேஷ்வர் டெம்கார் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.
மேலும் சிலிண்டர் வெடித்து சிதறியதில் அர்ச்சனா மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் அர்ச்சனா 80 சதவீத தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த துயர சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் தானே மாவட்டம் உல்லாஸ் நகரில் வடபாவ் கடையில் சிலிண்டர் வெடித்து கடை உரிமையாளர் பலியாகி, 11 பேர் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.