மதுரையில் நர்சு உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா

மதுரையில் நர்சு உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்கள் 4 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் நர்சு உள்பட மேலும் 4 பேருக்கு கொரோனா
Published on

மதுரை,

மதுரையை சேர்ந்த 15 பேருக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் மேலும் 4 பேருக்கு நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்களில் ஒருவர் மதுரை கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர். ஏற்கனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் மூலமாக இவருக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுபோல் அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவருக்கு எப்படி பரவியது என்பது குறித்து சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்ததாக மதுரை மேலமாசி வீதி பகுதியை சேர்ந்த 64 வயது முதியவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்ததால் இவருக்கு கொரோனா பரவியிருக்கலாம்.

இதுபோல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றி வரும் 40 வயது நர்சு ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் மதுரை புறநகர் பகுதியை சேர்ந்தவர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளிடமிருந்து இவருக்கு பரவியிருக்கிறது. ஏற்கனவே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றிய நர்சு ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நர்சுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேருக்கும், மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுபோல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. மேலும் சுகாதார துறையின் மூலம் அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதைதொடர்ந்து மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79-ஆக உயர்ந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com