தனியார் கார் பந்தய மைதானத்தில் கொரோனா விதிமீறல்

கோவை அருகே உள்ள தனியார் கார் பந்தய மைதானத்தில் கொரோனா விதிமீறல் நடந்ததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
தனியார் கார் பந்தய மைதானத்தில் கொரோனா விதிமீறல்
Published on

போத்தனூர்

கோவை அருகே உள்ள தனியார் கார் பந்தய மைதானத்தில் கொரோனா விதிமீறல் நடந்ததால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

தீவிர நடவடிக்கை

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அத்துடன் தனியார் நிறுவனங்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதுபோன்று பொது இடங்களில் அதிகளவில் கூட்டம் கூடக்கூடாது என்றும், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் கோவையை அடுத்த செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஓரட்டுகுப்பை பகுதியில் எல்.ஜி. கார் பந்தய மைதானம் உள்ளது. இங்கு அதிக நபர்கள் கூடி பயிற்சியில் ஈடுபடுவதாக பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், மதுக்கரை தாசில்தார் நாகராஜ், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமாதேவி, செட்டிபாளையம் செயல் அதிகாரி ஜெகதீஸ் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

ரூ.10 ஆயிரம் அபராதம்

அப்போது அங்கு கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் சேர்த்ததுடன், தனிமனித இடைவெளி இல்லாமலும், சிலர் முகக்கவசம் அணியாமலும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் எல்.ஜி. கார் பந்தய நிர்வாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

மேலும் கொரோனா விதிமுறைகளை மீறினால் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com