சிறைச்சாலைகளில் கொரோனா பீதி: ‘கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை துரிதபடுத்துங்கள்’ - மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சிறைச்சாலைகளில் கொரோனா பீதி காரணமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்தும்படி மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சிறைச்சாலைகளில் கொரோனா பீதி: ‘கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கையை துரிதபடுத்துங்கள்’ - மாநில அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
Published on

மும்பை,

கொரோனா வைரஸ் பீதியால் சிறைகளில் இந்த நோய் தொற்று பரவாமல் தவிர்க்கும் வகையில் 7 ஆண்டுகளுக்கு கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டவர்கள், 7 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் விசாரணை கைதிகளை ஜாமீன் அல்லது பரோலில் விடுதலை செய்யலாம் என்றும், இதுகுறித்து உயர்மட்ட குழு அமைத்து அந்த குழு பரிந்துரைக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்தநிலையில், மராட்டியத்தில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் விடுவிக்கப்படாமல் இருப்பதாக மும்பை ஐகோர்ட்டுக்கு வக்கீல் எஸ்.பி.தலேகர் என்பவர் கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக மும்பை ஐகோர்ட்டு தானாக முன்வந்து விசாரணை நடத்தியது.

4 ஆயிரம் கைதிகள் விடுவிப்பு

அரசு தரப்பில் வக்கீல் தீபக் தாக்கரே ஆஜரானார். அப்போது அவர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி 7 ஆண்டுகள் வரை சிறையில் இருக்கும் கைதிகளையும், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளையும் தற்காலிகமாக விடுவிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

இதன்படி 11 ஆயிரம் கைதிகள் 45 நாட்களுக்கு அவசரகால பரோலில் விடுவிக்கப்பட உள்ளனர். 4 ஆயிரத்து 60 கைதிகள் பரோல் மற்றும் தற்காலிக ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். மற்ற கைதிகளை விடுவிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் உள்ள எந்த சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறினார்.

பின்னர் நீதிபதி ஜி.எஸ்.குல்கர்ணி தனது உத்தரவில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தற்காலிக ஜாமீன் மற்றும் பரோலில் விடுவிக்க தகுதியானவர்கள என அடையாளம் காணப்பட்ட கைதிகள் மற்றும் குற்றவாளிகளை விடுவிக்கும் பணிகளை விரைவுபடுத்தும்படி மராட்டிய அரசுக்கு உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com