

இளையான்குடி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான காய்கறி மார்க்கெட் மூடப்பட்டு மாற்று இடங்களில் இடைவெளிவிட்டு செயல்பட உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதி மக்கள் காய்கறிகளை கூட்டமின்றி வாங்கும் வகையில் பஸ் நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி கடைகள் அமைத்து மார்க்கெட் செயல்பட பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் காலை 7 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மார்க்கெட் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பஸ் நிலையத்தில் கடைகள் அமைக்கவும், மக்கள் சமூக இடைவெளியில் நின்று பொருட்கள் வாங்கவும் கட்டம் வரையப்பட்டுள்ளது. இந்த மார்க்கெட் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் செயல்படும் என செயல் அலுவலர் ஜெயராஜ், சுகாதார ஆய்வாளர் சூர்யாகுமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.