

திருச்சி,
திருச்சி மாநகரில் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதிகரிக்கும் கொரோனா
திருச்சி மாநகரில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. தினமும் 1,500 பேர் வீதம் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.
எனவே, கொரோனா பரிசோதனையும் தினமும் 6000 பேருக்கு மேல் எடுக்கப்படுகிறது. ஏற்கனவே ரேஷன் கடைக்கு, கொரோனா நிவாரணம் பெற வருபவர்களுக்கு திருச்சி மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகர் வலம் வரும் இளைஞர்கள்
ஆனாலும், ஊரடங்கு நேரத்தில் திருச்சி மாநகரில் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சாலையில் இளைஞர்கள் சுற்றித்திரிகிறார்கள். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் ஊர் சுற்றுபவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. இதனால் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றி திரிபவர்களைப் பிடித்து கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
கொரோனா பரிசோதனை
அதன்படி, மாநகராட்சியின் நகர ஆரம்ப சுகாதார ஊழியர்களால் திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ மேம்பாலம் கீழ் மாநகராட்சி பணியாளர்கள் கொரோனா பரிசோதனைக்கான கிட்-டுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது கருமண்டபம் மற்றும் ஜங்ஷன் பகுதிகளிலிருந்து அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். சிலர் மெடிக்கல் போவதாகவும், சிலர் ஆஸ்பத்திரி போவதாகவும் சாக்குபோக்கு சொன்னார்கள். அவர்களில் பலர் ஆஸ்பத்திரிக்கு கொரோனா சோதனைக்கு செல்வதாக பொய் சொன்னார்கள். அப்படியா....! இங்கே வாங்க.., இப்போதே இங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்கிறோம் என கூறி அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முகவரி பதிவு
அவர்களின் பெயர், செல் நம்பர், முகவரி உள்ளிட்டவைகளை மாநகராட்சி பணியாளர்களால் குறித்து கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவு செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக்கூறி அனுப்பி வைக்கப்பட்டனர். தேவையின்றி சுற்றி திரிந்தவர்களை பிடித்து கொரோனா பரிசோதனை செய்ததை, இப்படி நடக்கும் என தெரியாமல் போய் விட்டதே. தெரிந்திருந்தால் வீட்டை விட்டு வெளியே வந்திருப்போமா? என சிக்கியவர்கள் புலம்பியபடி சென்றனர்.