சேலத்தில் மகளுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை

சேலத்தில் மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
சேலத்தில் மகளுக்கு கொரோனா: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மூதாட்டி தற்கொலை
Published on

சேலம்,

சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள பழனியப்பா நகரை சேர்ந்தவர் சாந்தா (வயது 67). இவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி சாந்தாவின் மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் வீட்டிலேயே சாந்தா தனிமைப்படுத்தப்பட்டார். இதன் காரணமாக மனவேதனையில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் நாம் தனிமைப்படுத்தப்பட்டு கஷ்டப்படுகிறோம் என மன வேதனை அடைந்த சாந்தா தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் அவருடைய தற்கொலைக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் கோரிமேடு பகுதியில் உள்ள அரசு மகளிர் கல்லூரி முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர் அங்கு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com