திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி - திண்டுக்கல்லை சேர்ந்தவர்

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார். அவர் திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஆவார்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி - திண்டுக்கல்லை சேர்ந்தவர்
Published on

திருச்சி,

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தனி வார்டில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள சிரங்காட்டுப்பட்டியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர், நேற்று அதிகாலை திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 15-ந் தேதி மாலை, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அவர் சளி, இருமல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் அவருக்கு காசநோய்க்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது.

தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படாமல் திருச்சி பாலக்கரையில் மிகவும் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் ஏற்கனவே, திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவரும், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கிறார். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களில் கொரோனாவுக்கு இது 3-வது உயிரிழப்பாகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com