கொரோனா வைரஸ் எதிரொலி: சளி, காய்ச்சல் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் தனிக்கவனம் - சுகாதாரத்துறை உத்தரவு

கொரோனா வைரஸ் எதிரொலியாக சளி, காய்ச்சல் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலி: சளி, காய்ச்சல் நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் தனிக்கவனம் - சுகாதாரத்துறை உத்தரவு
Published on

திண்டுக்கல்,

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் ஏராளமானோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவி இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை, விமான நிலையங்களிலேயே பரிசோதனை செய்ய மருத்துவக்குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சீனா உள்பட வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தியர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக நாடு முழுவதும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் மாவட்டந்தோறும் அரசு தலைமை மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தனிவார்டு அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற் கிடையே சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகள் மீது தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்புள்ள நோயாளிகள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த 22 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். இறுதியில் அவர் களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தனிவார்டு தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் தேவையான மருந்துகள், முகக்கவசம் ஆகியவையும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் சளி, இருமல், காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு உரிய பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com