புதிதாக 49 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆனது

புதுச்சேரியில் புதிதாக 49 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது
புதிதாக 49 பேருக்கு தொற்று கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆனது
Published on

புதுச்சேரி,

புதுச்சேரியில் புதிதாக 49 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றுக்கு மேலும் ஒருவர் பலியானார். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்தது.

49 பேருக்கு தொற்று

புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரியில் நேற்று முன்தினம் வரை 1,151 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று 772 பேருக்கு உமிழ் நீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 49 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 42 பேர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 7 பேர் ஜிப்மரிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 35 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இவர்களில் 30 பேர் புதுவை, 5 பேர் ஏனாமை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

ஒருவர் பலி

இதற்கிடையே தொற்றினால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுல்தான்பேட்டையை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஏற்கனவே இவர் சர்க்கரை நோய் உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தவர் ஆவார். இவரையும் சேர்த்து சாவு எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1,200 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். புதுச்சேரியில் 511 பேரும், காரைக்காலில் 32 பேரும், மாகி 2 பேரும் மற்றும் ஏனாமில் 20 பேரும் என மொத்தம் 565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் 619 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 22,743 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 253 பேருக்கு சோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com