

திருவொற்றியூர்,
எண்ணூர் அத்திப்பட்டு மேம்பாலம் அருகே எண்ணூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வடிவேல், கணேஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 பேர் வந்தனர். அதில் ஒருவர் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அணியும் சீருடை அணிந்திருந்தார்.
அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அவர்கள் வந்த மொபட்டில் 36 மதுபாட்டில்கள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.அவர்கள் இருவரையும் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில் அவர்கள் வக்கீல்களான ராயபுரத்தைச் சேர்ந்த வேங்கையன் (வயது 39), காசிமேட்டை சேர்ந்த பாபு (35) என்பது தெரிந்தது.
இருவரும் மீஞ்சூர் அத்திப்பட்டு அருகே உள்ள ஒரு மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்ததாகவும், போலீசார் தங்களை சோதனை செய்யாமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் அணியும் உடை அணிந்து சென்றதாகவும் கூறினர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்து போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.