கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மனைவி கடத்தப்பட்டதாக பொய் புகார் கொடுத்தவர் கைது

பெங்களூருவில், கள்ளக்காதலனுடன் வாழ்வதற்காக வீட்டை விட்டு ஓடிப்போன மனைவி கடத்தப்பட்டதாக போலீசில் பொய் புகார் கொடுத்த கணவரை போலீசார் கைது செய்தார்கள்.
கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய மனைவி கடத்தப்பட்டதாக பொய் புகார் கொடுத்தவர் கைது
Published on

பெங்களூரு,

பெங்களூரு மடிவாளா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் உசேன். இவரது மனைவி சபீனா. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வீட்டு முன்பு நின்ற தனது மனைவி சபீனாவை காரில் வந்த மர்மநபர்கள் சிலர் கடத்தி சென்று விட்டதாகவும், அவரை விடுவிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்கும்படி கடத்தல்காரர்கள் மிரட்டல் விடுப்பதாகவும் கூறி மடிவாளா போலீஸ் நிலையத்தில் உசேன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சபீனா கடத்தப்படவில்லை என்பதும், அவர் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, உசேன், சபீனாவை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தது.

அதாவது சபீனாவுக்கும் ஒரு வாலிபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் உசேனுடன் சேர்ந்து வாழ சபீனாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ அவர் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக வீட்டை விட்டு ஓடிப்போய் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சபீனா வாழ்ந்து வந்துள்ளார். இதுபற்றி உசேனுக்கு நன்கு தெரிந்திருந்தது. தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி சபீனாவை உசேன் அழைத்தும், அவர் மறுத்து விட்டார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சபீனா நிம்மதியாக வாழ கூடாது என்று உசேன் கருதியுள்ளார்.

இதனால் சபீனா கடத்தப்பட்டு இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தால், கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்றும், மனைவியும் தன்னுடன் குடும்பம் நடத்த வந்து விடுவார் எனவும் நினைத்து போலீசில் உசேன் பொய் புகார் கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து உசேனை மடிவாளா போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com