குழந்தைகள் பாசப் போராட்டத்தால் கள்ளக்காதல் ஜோடி பிரிந்தது நாகர்கோவில் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு

நாகர்கோவில் போலீஸ் நிலையத்தில், குழந்தைகள் நடத்திய பாசப் போராட்டத்தால் கள்ளக்காதல் ஜோடி பிரிந்தது.
குழந்தைகள் பாசப் போராட்டத்தால் கள்ளக்காதல் ஜோடி பிரிந்தது நாகர்கோவில் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு
Published on

நாகர்கோவில்,

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடை நடத்தி வருகிறார். இவருக்கு 32 வயதுடைய மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். கடைக்காரருக்கு அவருடைய மனைவி கடையில் உதவியாக இருந்து வந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் ஒருவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கும் மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த கடைக்கு ஆட்டோ டிரைவர் அடிக்கடி வந்து சென்றதால், கடைக்காரரின் மனைவிக்கும், அவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைக்காரரின் மனைவி இளைய குழந்தையுடனும், ஆட்டோ டிரைவர் தனது இளைய குழந்தையுடனும் காணாமல் போய் விட்டனர். இதுதொடர்பாக இரு குடும்பத்தினரும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பரில் போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணையும், ஆட்டோ டிரைவரையும் தேடி வந்தனர். இருவரும் கள்ளக்காதல் மோகத்தில் சென்றிருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர்.

சென்னையில் மீட்பு

இதையடுத்து ஆட்டோ டிரைவரின் செல்போன் மூலம் போலீசார் துப்பு துலக்கியதில் ஆட்டோ டிரைவர், அந்த பெண்ணுடன் சென்னை அரும்பாக்கம் பகுதியில் குழந்தைகளுடன் வசித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் அவர்களை மீட்டு நாகர்கோவில் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். மேலும் இருவருடைய குடும்பத்தாருக்கும் போலீசார் தகவல் கொடுத்து போலீஸ் நிலையத்துக்கு வருமாறு கூறினர்.

பாசப்போராட்டம்

அங்கு ஆட்டோ டிரைவரிடம் அவருடைய மனைவியும், இளம்பெண்ணிடம் கடைக்காரரும் குழந்தைகள் நலனுக்காக தங்களுடன் வந்து சேர்ந்து வாழுமாறு கூறி அழைத்தனர். ஆனால் கள்ளக்காதல் ஜோடியோ ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த மோகத்தின் காரணமாக இருவரும் சேர்ந்து வாழ்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து போலீசாரும் கள்ளக்காதல் ஜோடியிடம் பேசி அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழுமாறு கூறினர். அதற்கும் அவர்கள் மசியவில்லை.

இதையடுத்து கடைக்காரரின் மூத்த பிள்ளையை இளம்பெண்ணுடனும், ஆட்டோ டிரைவரின் மூத்த பிள்ளையை ஆட்டோ டிரைவருடனும் தனித்தனியாக பேச போலீசார் ஏற்பாடு செய்தனர். அப்போது இளம்பெண்ணின் மூத்த பிள்ளை தந்தையுடன் வருமாறு கூறி கண்ணீர்விட்டு கதறி அழுதது. இதேபோல் ஆட்டோ டிரைவரின் பிள்ளையும் தாயுடன் வருமாறு கூறி அழுதது. இதனால் போலீஸ் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் ஒரு பாசப்போராட்டமே நடந்தது.

கள்ளக்காதல் ஜோடி பிரிந்தது

பிள்ளைகளின் பாசத்தால் மனம் இறங்கிய கள்ளக்காதல் ஜோடி மீண்டும் தங்களது குடும்பத்துடனேயே சேர்ந்து வாழ சம்மதிப்பதாக போலீசாரிடம் தரிவித்தனர். இதையடுத்து போலீசார் இருவரிடமும், அவர்களுடைய குடும்பத்தாரிடமும் எழுதி வாங்கிக் கொண்டு அவரவர் குடும்பத்துடன் சேர்ந்து வாழும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

பிள்ளைகள் நடத்திய பாச போராட்டத்தால் கள்ளக்காதல் ஜோடி பிரிந்த சம்பவம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com