

சென்னை ஜெ.ஜெ.நகர் பகுதியைச்சேர்ந்தவர் நடராஜன் (வயது 70). இவருடைய மனைவி முத்தம்மா (65). இவர்கள் இருவரும் நேற்று காலை 11 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். கமிஷனர் அலுவலக வாசலில் வைத்து திடீரென தங்கள் தலையில் மண்எண்ணெய் ஊற்றி இருவரும் தீக்குளிக்க முயற்சி செய்தனர். உடனடியாக அங்கு காவலுக்கு நின்ற போலீசார், அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து காப்பாற்றினார்கள்.
அவர்கள் போலீஸ் கமிஷனருக்கு கோரிக்கை வைத்து, மனு ஒன்றை எடுத்து வந்திருந்தனர். அந்த மனுவில், சாட்சிக்கு, கையெழுத்து போட வந்தவர் ஏமாற்றி தங்களது நிலத்தை அபகரித்து கொண்டார் என்றும், இது தொடர்பாக புகார் கொடுத்தும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், உரிய நடவடிக்கை எடுத்து தங்கள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க புளியந்தோப்பு போலீசாருக்கு கமிஷனர் அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டனர். தீக்குளிக்க முயன்ற நடராஜன், அவருடைய மனைவி முத்தம்மா இருவரையும், வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் எச்சரித்து அனுப்பி வைத்தார்.