

கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இருந்தால், அவர்களுக்கு சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
அதன்படி இந்த வழக்குகளை கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்களில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை செய்வார்கள்.
பின்னர் விசாரணை முடிவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைப் பார்கள். அதன்பிறகு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவால் பரிந்துரை செய்யப்பட்ட தீருதவி தொகையை வழங்குவது குறித்து கலெக்டர் முடிவு எடுப்பார்.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இது வரை 92 வழக்குகளில் 150 பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தீருதவி தொகையாக ரூ.59 லட்சத்து 63 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டத்தில் மேலும் 13 வழக்கில்,
பாதிக்கப்பட்ட 19 பேருக்கு தீருதவி தொகை வழங்க கருத்துரு தயார் செய்து மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக கடலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.