மாநில எல்லைகள் மூடப்பட்டதால் புதுச்சேரி வாகனங்களை திருப்பி அனுப்பிய கடலூர் போலீசார்

புதுச்சேரி மாநில எல்லைகள் மூடப்பட்டதற்கு பதிலடியாக கடலூர் போலீசார், புதுவை வாகனங்களை தங்கள் எல்லைக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர். இதனால் இருமாநில எல்லை கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மாநில எல்லைகள் மூடப்பட்டதால் புதுச்சேரி வாகனங்களை திருப்பி அனுப்பிய கடலூர் போலீசார்
Published on

பாகூர்,

புதுச்சேரியும், தமிழகத்தின் கடலூர், விழுப்புரம் மாவட்டமும் பின்னிப்பிணைந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா நோய் தாக்கத்தால் புதுச்சேரி, தமிழக மாநில எல்லைகள் மூடப்பட்டு, வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இரு மாநில எல்லைகளிலும் இருசக்கர வாகனங்களில் சென்று தங்களது அன்றாட பணிகளை மக்கள் செய்து வந்தனர்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் முதல் புதுச்சேரி மாநில போலீசார் பாகூர், சோரியாங்குப்பம், கரையாம்புத்தூர், திருக்கனூர் உள்பட பல்வேறு பகுதியில் உள்ள 81 சிறிய வழிகளை அடைத்தனர். இதனால் புதுச்சேரி எல்லையில் உள்ள தமிழக பகுதியான ரெட்டிச்சாவடி, புதுக்கடை, திருப்பணாம்பாக்கம், பாக்கம் கூட்டுரோடு, தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் செல்ல முடியாமல் தவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கடலூர் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

இந்த நிலையில் நேற்று பிற்பகலில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி ஆகியோர் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் எதிரே நின்று புதுச்சேரியில் இருந்து வந்த புதுவை பதிவெண் கொண்ட அனைத்து வாகனங்களையும் திருப்பி அனுப்பினர். அந்த வழியாக வந்தவர்கள், தாங்கள் கிருமாம்பாக்கம், பாகூர் பகுதிக்கு செல்கிறோம், இந்த வழியில்லை என்றால் எங்களால் அங்கு செல்லமுடியாது என்றனர். இது குறித்து போலீசார், எங்களுக்கு தெரியாது, நீங்கள் சென்றுவிடுங்கள் என்று கூறிவிட்டனர்.

சிலர் வேலைக்கு சென்று வர அனுமதி சீட்டு வாங்கியும் போலீசார் அனுமதிக்கவில்லை. மேலும் புதுச்சேரி அரசு வாகனங்களையும் அனுமதிக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்து கிடந்து மாற்று வழியாக கரிக்கலாம்பாக்கம் சென்று சுற்றிவந்தனர். புதுச்சேரி வாகனங்களை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் மறித்ததால் அப்பகுதியே பரபரப்பாக காட்சியளித்தது.

பதற்றம்

இது சம்பந்தமாக புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும், கவர்னர் அலுவலகத்திற்கும், அமைச்சர் கந்த சாமிக்கும் பலர் தொடர்பு கொண்டு முறையிட்டனர். எனவே அமைச்சர் கந்தசாமி கடலூர் மாவட்ட கலெக்டரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து புதுச்சேரி வாகனங்களை ரெட்டிச்சாவடி போலீசார் அனுமதித்தனர்.

இதேபோல் இருளன்சந்தை பிரதான சாலை மூடப்பட்டதற்கு திருப்பனாம்பாக்கம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பாகூர் போலீசார் அந்த சாலையை திறந்தனர்.

புதுச்சேரி - தமிழக போலீசாரின் செயல்பாட்டால் இரு மாநில எல்லையில் உள்ள கிராமங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசு உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு ஒரு சுமூகமான முடிவு எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com