நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு: ஓட்டல்கள் மூடப்பட்டதால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள் மூடப்பட்டதில் ரூ.10 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு: ஓட்டல்கள் மூடப்பட்டதால் ரூ.10 கோடி வருவாய் இழப்பு
Published on

நெல்லை,

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் நெல்லை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பஸ், ரெயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டன.

ஓட்டல்கள், வணிக வளாகங்கள் இழுத்து மூடப்பட்டன. மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் மட்டும் தங்கு தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்து இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் மூடப்பட்டதால், அதில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பார்சல் உணவு வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய ஓட்டல்கள் மூடப்பட்டதால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்களின் சங்கத்தின் நெல்லை மாவட்ட தலைவர் ராம்குமாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

ரூ.10 கோடி வருவாய் இழப்பு

ஊரடங்கு உத்தரவால் ஓட்டல் தொழில் மிகவும் பாதித்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் சுமார் 1,000க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. இதில் சுமார் 10 ஆயிரம் பேர் பணியாற்றி வருகிறார்கள். தற்போது அவர்கள் அனைவரும் வேலை இழந்துள்ளனர். கடந்த மாதம் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு விட்டது. இந்த மாதமும் சம்பளம் கொடுப்போம். பங்குனி திருவிழா, திருமண விழாக்களுக்கு ஆன்லைன் மூலம் தங்கும் அறை முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்த ஊரடங்கு உத்தரவால் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்தாகி விட்டது. அதனால் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பி தர வேண்டும்.

அதிக நாட்கள் மூடப்பட்டதால் பராமரிக்க சிரமமாக இருக்கும். இந்த ஊரடங்கு உத்தரவால் இதுவரை ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் என்ன செய்வது? என்றே தெரியவில்லை. மத்திய, மாநில அரசுகள் ஓட்டல் உரிமையாளர்களின் நிலையை எண்ணி பார்த்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com